பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 8 April 2025

விடுதலை புலி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பெண்கள் அரசியல் துறை பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்களின் அனுபவத்திலிருந்து ஒரு பகுதி

  வெற்றிசெல்வன்       Tuesday, 8 April 2025

அதேவேளை 2002 சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் சர்வதேசத்தை கணித்து எதிர்கால திட்டங்களை அமைக்க பிரபாகரன் தவறிவிட்டார் என்பதை தமிழினி நூலில் குறிப்பிடுகிறார்-

தமிழினி

‘இறுதியாக நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளின்போது அதிகார பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி என்ற தீர்வைப்பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வை திணிப்பதன்மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்கு சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கம் சிக்கிவிட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்த கட்டத்திலும் ஆயுதங்களை கையைவிட்டு இழப்பதற்கு தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.

அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒருவரோடொருவர் முகம்கொடுத்து பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில் மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாக கிளிநொச்சியைவிட்டு வெளியேறியிருந்தார்.’

‘முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை மேற்குலக மத்தியஸ்தத்துடன் கையாளப்படும் நிலையை எட்டியிருந்ததனால் அந்த அரசியல் சூழலை கையாளக்கூடிய ராஜதந்திர துணிச்சல் புலிகளின் தலைமைக்கு அதிகம் தேவைப்பட்டது.

சமாதான சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திரத்தின் நுணுக்கங்களை துணிச்சலுடன் பயன்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தரும் நிலையை நோக்கி முன்னேறிச்செல்லமுடியாமல் திணறத்தொடங்கினார்.

வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலையிலும் போராட்டத்தை நம்பியிருந்த மக்களுக்காக தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராக தலைவர் பிரபாகரன் இருந்தார். ஆனால் அதை அந்த நேரத்தில் செய்வதற்கான துணிச்சலற்றவராகவே இருந்தார்.

பிரபாகரன்

இவையே தமிழினி, பிரபாகரன் மீது சொல்லும் ஒரே குறையாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளில் அதற்கான காரணத்தை இப்படி சொல்கிறார்-

‘உலகத்தையே பகைத்துக்கொண்டு ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றியடைதல் எப்படி சாத்தியமாகும் என்ற அளவிற்கேனும் சிந்திக்கத்தோன்றாதவாறு புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கை அனைவரது கண்களையும் கட்டிப்போட்டிருந்தது’

தமிழினி தனது நூலில் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோல்வியை தழுவ காரணமான இரண்டு முக்கிய விடயங்களை சொல்கிறார். ஈழ அரசியல் தெரிந்த எல்லோரும் அறிந்த காரணங்கள்தான் அவை.

01.புலிகள் அமைப்பின் அரைப்பங்கு போராளிகளுடன் கருணா பிரிந்து சென்றமை.

ஜெயசிக்குறு உட்பட பல போர்களில் புலிகள் ஈட்டிய வெற்றிக்கு கருணாவும் கிழக்கு மாகாண போராளிகளும் காரணமாக இருந்தார்கள் என்பதை யாரும் அறிவர்.

பெரும்பாலான வடக்கை சேர்ந்த இளையவர்கள் வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் சென்றுவிட்ட நிலையில் புலிகளின் படையணியை தாங்கிப்பிடித்தது கிழக்கு மாகாணமே. அப்படியான யதார்த்தத்தில் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டமை பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த பின்னடைவு சமாதானம் முறிந்து போர் தொடங்கிய பின்னர் வெளிப்படையாக தெரிந்தது.

கருணாவின் பிளவுபற்றி தமிழினி குறிப்பிடும்போது இயக்க தளபதிகளிடையே காணப்பட்ட போட்டி பொறாமைகள் இதற்கு பின்புலமாக இருந்தமையை நாசுக்காக குறிப்பிடுகிறார்.

கருணா

‘சந்திப்பில் தலைவர் பல விடயங்களைப்பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார்.அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்; ”மட்டக்களப்பு , அம்பாறை போராளிகள் போராட்டத்தில் எவ்வளவோ கஷ்டங்களைப்பட்டிருக்கிறாங்கள்.

அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகளை செய்யவேணும். நிதித்துறை மூலமா ஓரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்14லியிருக்கிறேன், அந்த சனத்திற்கு நிறைய உதவிகள் செய்ய சொல்லி. அவன் செய்யிறான்.

இவங்கள் பொட்டு ஆக்கள் வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறாங்கள். தளபதிமாருக்குள்ள முதலில் ஒற்றுமை இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.’

தமிழினியின் இந்த வரிகள் கருணா பிளவுக்கான காரணத்தை தெளிவாக சொல்லி நிற்கிறது.

கருணா பிளவின் பின்னர் ஒன்றாக உண்டு உறங்கி சொந்தங்களாக இருந்த கிழக்கு மாகாண சதோரதர்களை கொன்றமை குறித்து தமிழினி வருத்தம் தெரிவிக்கிறார்.

மேலும் கருணா மீதான குற்றசாட்டுக்களை போராளிகள் வழமைபோலவே கேள்வி கேட்காது ஏற்றுகொள்ள நேரிட்டது என்றும் குறிப்பிடுகிறார். ‘

‘தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்கு சமமானதாக இயக்கத்திற்குள்ளே கருதப்பட்டது.

இந்த போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்தது அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழிவகுத்தது.’ எனும் தமிழியின் கூற்று போராட்ட அமைப்புக்குள்ளும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பண்புகள் இருக்க வேண்டிய தேவையை சொல்லி நிற்கிறது.
logoblog

Thanks for reading விடுதலை புலி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பெண்கள் அரசியல் துறை பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்களின் அனுபவத்திலிருந்து ஒரு பகுதி

Previous
« Prev Post

No comments:

Post a Comment