பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 26 September 2025

இதுவும் ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Friday, 26 September 2025
கடந்த காலங்களில் ஜேவிபி தமிழர்களை ஆயுத ரீதியில் நேரடியாக தாக்கியதா?

இலங்கையின் புதிய ஜனாதிபதி புதிய அரசாங்கம் பதவியேற்ற பின், இலங்கையின்  குறிப்பாக வட பகுதி தமிழ்அரசியல்வாதிகள் தாங்கள் கருத்துகள் சொல்லாமல், தங்களது எடுபிடிகளை கொண்டு புதிய அரசாங்கத்துக்கு எதிரான பலவித கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

கடந்த காலத்தின் ஜேவிபி இயக்கம் தமிழர்களுக்கு எதிராக இருந்தது. இனி தமிழர்களே அழித்து விடும் என்பது போன்ற பலவித கருத்துக்கள். இதுவரை இருந்த ஜனாதிபதிகள் தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்தது போலவும், அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது போலவும் பலவித கதைகள். 

இலங்கையில் ஜேவிபியும் அதன் தொடர்ச்சியாக என் பி பி யும் தமிழர்களுக்கு எதிராக இருந்தது போலவும் எழுதி வருகிறார் கள்.

இந்த தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தமிழர்கள் அதைவிட தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில அடிமட்ட தலைவர்கள் கூட தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய அரசாங்கம் தமிழர்களை அழித்துவிடும். இவர்களுக்கு ஜேவிபி என் பி பி அனுரா குமார் யார் என்றே தெரியாது. அதைவிட ஒரு மத போதகர் இலங்கையில் நாலு தமிழர்களுக்கு ஒரு ராணுவம் இருந்து கொடுமை செய்வதாக சொல்லித் திரிகிரார்.

இதுவரை ஜேவிபி வரலாற்றில் எத்தனை தமிழர்களை கொலை செய்தார்கள் என்று யாராலும் கூற முடியுமா. மலையகத் தமிழர்களுக்கு எதிராக இருந்ததாக தெரியவில்லை. ஆனால் சிங்கள பகுதிகளில் பெரும் வியாபாரிகளாக தொழில் அதிபர்களாக இருந்த இந்திய தமிழர்களுக்கு எதிராக இருந்தது உண்மை. ஆனால் அவர்கள் யாரையும் கொலை செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். 

1971 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்தால், மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வந்த இந்திய படைகளால் கொல்லப்பட்டார்கள். அப்போதுஅப்பாவி பொதுமக்களும் இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். எந்த தமிழ் தலைவர்கள் ஆவது கண்டனம் தெரிவித்தார்களா? 

1989 காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய படைக்கு எதிராக இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவிடம் உதவி கேட்டார்கள். அப்பொழுது சிங்கள பகுதிகளில் ஜேவிபி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சிகளில் இரண்டாவது முறையாக ஈடுபட்டார்கள். பிரேமதாசாவுக்கு அவர்களை எதிர்க்க ராணுவம் போலீசார் தயக்கம் காட்டியதால், பிரேமதாசா பச்சைப்புலிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை சுட்டு வெட்டி கொலை செய்தார்கள். அப்போது அதை யாராவது தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் செய்தார்களா. 

விடுதலைப் புலிகளுக்கு இந்திய படையை எதிர்ப்பதற்கு ஏன் சிங்கள இளைஞர்களை கொலை செய்ய வேண்டும். தங்கள் தேவைக்காக பிரேமதாசாவுக்கு அடியாளாக செயல்பட்டார்கள். அதன் விளைவு தான் 2009இல் தெரிந்தது. 1989இல் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களின் உறவினர்கள் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்து மூர்க்கத்தனமாக தமிழர்களை தாக்கினார்கள். இதை நாங்கள் உலகம் முழுக்க கொண்டு சென்றோம் தமிழர்களே சிங்கள ராணுவம் கொள்கிறது என்று, ஆனால் அன்று பிரேமதாசாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகள் கொலை செய்த சிங்கள மக்களின் நினைவுகள் எல்லாம் மறைக்கப்பட்டன. 

தமிழர்களின் பாதுகாப்புக்காக விடுதலைக்காக என்று உருவாகிய தமிழ் இயக்கங்கள் துரோகிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை தானே இந்திய படையுடன் சேர்ந்தும் இலங்கை படையுடனும் சேர்ந்து கொலைகள் செய்தோம். 

இன்று ஜேவிபியின் புதிய அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரி என்று பிரச்சாரச் செய்யும் தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்நாட்டில் இருக்கும் பணத்துக்காக செயல்படும் தலைவர்கள் கூறட்டும் ஜேவிபி எத்தனை தமிழர்களை கொலை செய்தார்கள் என்று. 

தமிழ் இயக்கங்களை விடவா JVP என் பி பி தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட யாராவது ஆதாரப்பூர்வமாக கூற தயாரா? எனக்கும் சிலவேளை தெரியாமல் இருக்கலாம் அதை அறிய ஆவலாக இருக்கிறேன். 

சித்தார்த்தன் 

செல்வம் அடைத்தனநாதன்

சுரேஷ் பிரேமச்சந்திரா 

டக்ளஸ் தேவானந்தா 
பிள்ளையான் 
கருணா அம்மான்

இவர்கள் தமிழர்கள் மேல் செய்யாத சித்திரவதைகள் கொலைகளா? இவர்களை இன்று வரை இவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களே ஆதரித்து வருகிறார்கள். 

இலங்கை தமிழ் மக்களும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து தங்கள் உரிமைகளை தட்டிக் கேட்க வேண்டும். பழைய ஆயுதம் தூக்கி இயக்கங்களின் தலைவர்களை இனிமேல் அரசியலில் இருந்து தூக்கி எறியுங்கள். புதியவர்கள் வந்து தமிழ் மக்களுக்கு உண்மையாக நல்ல சேவை செய்யட்டும்.
logoblog

Thanks for reading இதுவும் ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment