பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 20 January 2026

  வெற்றிசெல்வன்       Tuesday, 20 January 2026
நல்ல வெய்யில் சுட்டெரிக்கின்ற மாதம் ஆனால் மாதமும் திகதியும் சரியாக ஞாபகம் இல்லை, 79 ம் ஆண்டு அல்லது 80 ம் ஆண்டாக இருக்க வேண்டும், சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாசாலையில் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாணத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்படுவதற்கான கூட்டத்திற்கு சந்ததியாரின் வழிகாட்டலில் சில குறிப்பிட்ட சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு முன்னர் வலிகாமம் மேற்குப் பகுதியிலுள்ள பிரதான கல்லூரிகளுக்கும் சீநோருக்கும் நானும் சந்ததியாரும் மோட்டார் சைக்கிளில் சென்று அகதிகளுக்கான உதவியாக மாதாந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்டளவு இயலுமான தொகையினை சம்பளத்திலிருந்து கழித்து எடுத்து தந்து இந்த அகதிகளுக்காக தேவைகளை நிறைவேற்றும் பணிக்குப் பங்களிப்புச் செய்யும்படி கோரி வந்தோம். இந்தப் பயணத்தின் போது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இன்றி நடுவழியில் நின்றுவிட, பஸ்சில் சுழிபுரம் வந்து சந்ததியார் வீட்டில் நல்ல கைத்குத்தரிசிக் கஞ்சி சந்ததியாரின் தங்கையால் பரிமாறப்பட்டபோது பசியாறிக் கொண்டு விடைபெற்றது ஞாபகத்தில் நிலைத்து விட்டது. ஒரு திண்ணையும் அதனோடு சேர்ந்த உள்ளறையும் வெளியில் ஓலைக் குசினியும் கொண்ட மண்வீடு. வீரத்தாய் என அமிர்தலிங்கத்தால் பெயர் சூட்டப்பட்ட சந்ததியாரின் தாயும், தங்கையும் அங்கு குடியிருந்தனர். சந்ததியார் அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு நேரெதிரான இடதுசாரிய அரசியலுக்கு மாற்றம் பெற்று கூட்டணியின் கூட்டங்களில் நேரேயே வந்து அவர்களை அம்பலப்படுத்தி வந்தபோது அந்த தாய் வீரத்தாயிலிருந்து துரோகத்தாயாக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறொரு சூழலில் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அதற்கு வருகை தந்திருந்தவர்களில், எனது கல்லூரியான வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற அன்றைய விக்டோரியா கல்லூரி அதிபர் அருணாசலம் அவர்களும் ஒருவர்.

அன்று கூட்டத்துக்கு எப்பவும் நடக்குமாற் போலவே நேரத்துக்கு ஆட்கள் வந்து சேராததால் பிந்தியே ஆரம்பமாகியது.

அதிக கூட்டமில்லை ஆனால் சுமாராக ஒரு பத்துப் பதினைந்து பேர் மட்டில் வந்ததாக ஞாபகம்.

இத்தனைக்கும் எனது முதல் காதல் முளைவிட்டிருந்த வயது அது. தரப்பட்ட வேலையை தவறவிட்டு விட்டு தாமதமாகவே கூட்ட அறிவிப்பை நான் செய்திருந்தேன். சந்ததியாரிமிடமிருந்து தப்ப முடியவில்லை. மிகக் கண்டிப்பாகவும் ஆனால் மிகச் சரியாகவும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். கண்டிப்பான மனிதன் என்ற பெயர் இவருக்கு உண்டு.
 
ஆனால் கூட்டம் முடிந்தபின்னர் சந்ததியார் மலர்ந்த முகத்துடன் அந்தக் கடுப்பான கண்டிப்பான மனிதனா இவர் என்று வியக்கும் வண்ணம் தன்னுடைய கண்ணாடிக்குள்ளால் கண்களைச் சிமிட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கு சந்ததியார் இருவரை அழைத்து வந்தார். அவர்களில் ஒருவர் டேவிட் ஐயா மற்றவர் அரபாத் என்ற பெயரால் அழைக்கப்பட்ட காந்தீயப் பண்ணையில் தொண்டராக இருந்தவர்.

அன்றைய கூட்டத்தின் பேச்சாளரான திரு. டேவிட் ஐயா பேச்சுக்கு அடுத்ததாக அரபாத்தின் பேச்சில் காந்தீயப் பண்ணைகளில் நடந்த பொலிஸ் கெடுபிடிகள் பற்றியும் தனது சிறை மற்றும் சித்திரவதை அனுபவங்களையும் சொல்லியபோது அது சமூகந்தந்தவர்களிடத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

அகதிகளுக்கான புனர்வாழ்வுக் கழக யாழ்ப்பாண நிர்வாகம் அங்கு தெரிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக அதிபர் அருணாசலம் தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்திற்குப் பின்னர் விக்டோரியாக் கல்லூரி, வட்டு இந்துக்கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் ஆசிரியர்களின் சம்பளப் பணத்தில் மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகை அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பங்களிப்பாக ஓதுக்கித் தர சம்மதித்தனர்.

டேவிட் ஐயா அவர்கள் வேட்டியுடனும் கால்களில் சிலிப்பர்களுடனும் மிக எளிமையான வகையில் அங்கு வந்திருந்தார்.

இதற்குப் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு சந்ததியார் யாழ்ப்பாணம் வந்திருந்த போது சடுதியாக வந்து கிடைத்த செய்தியொன்றின் பிரகாரம் தான் உடனடியாக வவுனியாவுக்குச் செல்லவேண்டும் என்று புறப்பட்டு சென்றார். அகதி மக்களுக்கு எதிராக வன்னி மக்களின் கலவரங்கள் சில இடங்களில் தூண்டப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக அச்செய்தி இருந்ததாக எனது ஞாபகம். இது வரைக்கும் இந்தக் காந்தீய அமைப்புக்கும் சந்ததியாருக்கும் புளட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது எவருக்கும் தெரியாது. காந்தீயம் என்பது அகதிகளுக்கு உதவுகின்ற ஒரு தொண்டு நிறுவனம் என்பது மட்டுமே பரகசியமான விடயம்.

அன்று சென்றவரை நான் மீண்டும் நேரில் சந்திக்கவேயில்லை. காலம் பல கொடுவினைகளை இதற்குள் ஆற்றியிருந்தது. அவற்றில் ஒன்று தான் வெலிக்கடைப் படுகொலை.  ஏனைய சிறைக்கைதிகளோடு டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கொல்லப்பட்டதும் இனக்கலவரங்களும் என்று காலம் பிறழ்ந்து போக எமது இளமைப் பருவம் அதற்குள் அமிழ்ந்து போனது. நீண்ட காலத்துக்குப் பின்னர் சந்ததியார் புளட்டின் மத்தியகுழு உறுப்பினர் அரசியல் செயலர் என அறிகிறேன்.

இதே காந்தீயத்தின் பாலமோட்டை அகதிகள் குடியிருப்புக்கான தற்காலிக குடில்கள் அமைக்கும் சிரமதானவேலை, பொதுக் கிணற்றுக்கு சென்று வருவதற்காக, கற்களைக் கொட்டிப் பரவி மேடான பாதை ஒன்று அமைக்கும் சிரமதானம், வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகரில் காட்டுப்புதர்களையும் மரங்களையும் அகற்றி கிராமத்துக்கான ஒரு சீரிய பாதை ஒன்றினை அமைக்கும் சிரமதானம் என்பனவற்றில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான நாங்கள் கலந்து கொண்டோம். 

செட்டிகுளம் கந்தசாமி நகர் பொதுப்பாதைக்கான காடு வெட்டுகின்ற வேலையின் போது டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கோடரியுடன் மரங்களை வெட்டுவதற்கு எங்களுடன் இணைந்து கொண்டார். எங்களுக்கு நுளம்புக்கடியால் ஏற்படக்கூடிய மலேரியோ நோய்க்கான தடுப்பு மாத்திரைகளை வவுனியாவிலுள்ள தன்னுடைய சாந்தி கிளினிக்கில் தந்து எங்களை அனுப்பி வைத்த பின்னர் அவர் ஒதுங்கிவிடாமல் கந்தசாமி நகரில் தானும் தனது பங்குக்கு கோடரியுடன் வந்து நின்றது சிரமதானப்பணிக்காய் வந்தவர்கள் மத்தியில் ஊக்கத்தை உருவாக்கியது.

கோடாரி பிடித்து காடுவெட்டி பழக்கமின்றிய எமது யாழ்ப்பாணத்து உடல் அலுப்புடன், பசித்துக் களைத்து வந்தால், மதிய வேளையில், அகதி மக்களின் அன்புடன் கூடிய அன்றைய உணவு ஆரவாரமாக இருக்கும். பெரும்பாலும் ஓரு கறி இறைச்சியாகவும் பலவகை பச்சிலைக் கறிகளுடன் ஊரே கூடிச் சமைத்த அந்த உணவு உலகெங்கும் தேடியும் இன்னும் எனக்கு கிடைக்கவேயில்லை. அமிர்தமாகவே இன்றும் நினைவில் இருக்கின்றது.

மாலைநேரங்களில் சிரமதானப் பணிகள் முடிந்து வந்தால் சந்ததியார் விறகுகள் சுள்ளிகள் அடுக்கி நாங்கள் தங்கியிருந்த குடிலுக்குள் கூதல் வராமல் கணகணப்பாக்குவதற்கும் ஆளையே தூக்கிச் செல்லுமாற்போல் படையெடுத்து வரும் ஙொய் ஙொய் நுளம்புகளை விரட்டுவதற்கு புகை எழுப்புதற்கும் நெருப்பு மூட்டி வைத்திருப்பார். அந்தக் கணகணப்பில் சுற்றி அமர்ந்திருக்கின்றபோது சந்ததியார் சில வார்த்தைகளை மெல்லத் தொகுத்து உதிர்ப்பார். அவற்றுள் «தமிழீழ» எல்லைக்கிராமங்களைப் பற்றியும் இருக்கும். கூட்டணியின் அரசியல் ஏமாற்றைப் பற்றியும் இருக்கும். ஆனால் ஆயுதப் போராட்டத்தினை நோக்கிய கருத்துக்கள் அன்று இருக்கவில்லை. அவதானமாக இருந்திருக்கக் கூடும்.

இப்படி ஒருநாள் கூடியிருந்துவிட்டு எல்லோரும் கிழங்கடுக்கின மாதிரி சாக்குத் தறுப்பாளுக்கு மேல் விரிக்கப்பட்ட பாய்களில் கைகளை மடக்கி தலையணையாக்கி நித்திரையாகி விட்ட சற்று நேரத்தில் காட்டு மரங்களையெல்லாம் ஊடறுத்துக் கொண்டு பெரும் கூச்சல்கள் எழுந்தன. பரபரப்புடன் நாங்கள் எழுந்து என்னவோ ஏதோ என்று விசாரிக்கத் தொடங்கிய வேளை தகரங்களில் தட்டும் ஒலி நாலா பக்கமும் இருந்து வந்தது. தீப்பந்தங்கள் அங்கொன்றும் இங்கொன்றாக உயர்ந்து ஒளிரத் தொடங்கியது. கூச்சலுடனும் சிலர் விரைவாக ஒரு திசை நோக்கி செல்வது தெரிந்தது. சந்ததியார் எங்களில் இருவரை அழைத்துக் கொண்டு என்ன ஏதென விசாரிப்பதற்கு அந்த இருட்டிலும் விரைந்து சென்றுவிட்டார். மிஞ்சி நின்ற நாங்கள் இருப்புக் கொள்ள முடியாமல் சற்றுத் தாமதமாக பின் தொடர்ந்தோம். சனக் கூட்டம் போன வழியில் தீப்பந்தங்களைப் பின் தொடர்ந்து சென்றால் அது குடியிருப்புக்கு ஒரு வகையில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவரின் குடிசை வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. அங்கு நிறையப் பேர் ஏற்கனவே குழுமியிருந்தனர். எல்லா விபரங்களையும் சுற்றி நின்றவர்கள் சொல்வதற்கு முன்னதாகவே நடந்தது என்னவென்று அங்கு கண்ட காட்சியே எல்லாவற்றையும் சொல்லியது. இந்த இரட்டைக் குடிசை. நெல்லு மூட்டைககள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தினையும் படுக்கின்ற திண்ணையையும் கொண்டிருந்த தலைவாயில் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த குசினிக் கொட்டிலும் அதையடுத்து நின்ற வாழைத்தோட்டமும் நார்நாராய் கிழித்து வீசப்பட்டிருந்தது. கொட்டிலின் கூரை முகட்டினை சிறு தட்டுத் தட்டி மோதியதில் அது காட்போட் பெட்டியை நசுக்கின மாதிரி விழுந்து கிடக்க தட்டிகள் கிடுகுகள் எல்லாம் சிதிலமாய் கிடந்தது. வேரோடு பிடுங்கி வீசப்பட்ட வாழைமரங்கள் தலைவிரி கோலமாய் தரையில் துவம்சமாய் கிடந்தன. அந்த தலைவாசல் திண்ணையில் நித்திரையில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போய் சத்தம் எழுப்பாமலே இருந்து விட்டார்கள். தாங்கள் தப்பியது அருந்தப்பு என்று அவர்கள் கூறினார்கள். தலைவாசல் குடிசையில் அடுக்கியிருந்த நெல்மூட்டைகளோ என்னவோ அல்லது மனித வாடையோ என்னவோ தும்பிக்கை கொண்ட இந்த காட்டு ஜீவனை அக்குடிசையை தீண்டாமல் விலக்கி வைத்திருந்தது.

அன்றிரவு குடிசைகளுக்குள் விளக்குகளும் வெளியில் விறகுக்கட்டைகளால் மூட்டப்பட்ட தீச்சுவாலைகளும் தகரங்களைத் தட்டி எழுப்பப்படும் ஒலியும் அக் காட்டுக்கிராமத்தின் காவலை பலப்படுத்தியிருந்தன.
அன்றிலிலிருந்து அங்கு தங்கிநின்ற நாட்களின் இரவுகள் முறை வைத்துக் காவல் இருக்கும் இரவுகளாக கடந்து போனது.

இந்த இரவுகளை கடந்தவர்களில் மூவர் இன்று உயிருடன் இல்லை. அவர்களில் ஒருவர் சந்ததியார். கண்கள் தோண்டப்பட்டு குரூரமாக கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரைக் கொன்றவர்களில் சிலரும் இன்று இல்லை. அவரைக் கொலை செய்யத் தூண்டியவர்களும் அதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
logoblog

Thanks for reading

Previous
« Prev Post

No comments:

Post a Comment