பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 20 April 2026

நன்றி பொழிலன் தமிழ்நாடு

  வெற்றிசெல்வன்       Monday, 20 April 2026
தமிழீழ விடுதலைப் போராட்டம் கரிவியேந்தியப் போராட்டமாகத் தொடங்கப்பட்ட காலம் தொடங்கிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இல்லமும், தென்மொழி இயக்க அன்பர்களின் வீடுகள் எல்லாமும் தமிழீழப் போராளிகளின் தங்கு இல்லங்களாக இருந்தன..

"இதோ நான் ஒருவன் இருக்கிறேன் எனைச் சிறை செய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக்கின்றேன் 
என் தலை கொய்யினும் கொய்க!"
என்று  முழங்கியவர் பாவலரேறு..

ஈழத் தமிழர்களுக்காகத் 'தடா' உள்ளிட்டுத் தாமும் தம் குடும்பத்தாரும், தென்மொழி இயக்க அன்பர்களும் பெரும் இன்னல்களை ஏற்கும் நிலையில் தமிழ் இனத்திற்கு ஆதரவாய்ப் பாடாற்றியவர்..

ஈழத் தமிழர்களுக்கு உண்மையான ஆதரவு என்பது தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டமே என்று வெளிப்படையாக அறிவித்தவர்.. அதற்காக இயங்கியவர்..

தமிழீழ விடுதலைக் கூட்டணியின் விடுதலை மறத்தி திருவாட்டி ஊர்மிளா கந்தையா அவர்கள் தேடப்பட்டுக்  கொண்டிருந்த சூழலில் பல மாதங்கள் தம் இல்லத்திலேயே தங்க வைத்திருந்தார்..

அவரின் மறைவு பொழுது பாவலரேறு ஐயா அவர்கள் தென் மொழியில் வெளியிட்ட அறிக்கையே கீழே உள்ளது:

தமிழீழ விடுதலைக் கூட்டணி மகளிர் பேரவையின் கொழும்புக் கிளைச் செயலாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைத் துணைத்தலைவரும் ஆகிய திருவாட்டி.

ஊர்மிளா கந்தையா அவர்கள் அண்மையில் 19-5-1980-இல் இலங்கை வவுனியாவில் திடுமெனக் காலமானார் என்னும் செய்தியை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 36 அகவை ஆகும் இவர், தமிழீழ விடுதலையில் மிகவும் ஆர்வமும் போராட்ட உணர்வும் கொண்ட வீரமகளிர் ஆவார். 1977-ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் பொழுது, கொழும்பு ஏதிலியர் தங்கு மிடங்களில் அடைக்கலமடைந்த தமிழ் மக்களுக்குப் பசி, பட்டினி கருதாமல், இரவு பகல் பாராமல், கண் துஞ்சாது அரும்பணியாற்றியவர் இவர். தமிழ் ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தொண்டர்களில் ஒருவராகவும் இருந்து பெருந்தொண்டு செய்துள்ளார். கூரிய நுண்ணறிவும், விடா முயற்சியும், கொள்கை யுரனும், மிக்க துணிவும் விடுதலை வேட்கையும், தமிழின மறுமலர்ச்சிக்காக தம் வாழ்வு நலன்களையே ஈகம் செய்து கொண்ட பொதுமை நோக்கும் கொண்ட ஊர்மிளையின் அரிய தொண்டு, தமிழீழ விடுதலை வரலாற்றின் மறவர் பட்டியலில் தலையாய இடம் பெற வேண்டிய பெருமை பெற்றதாகும். தென்மொழியின் தொண்டிலும், தென்மொழிக் குடும்பத்திலும் மிக்க ஈடுபாடும் மதிப்பும் கொண்ட இவர் மறைவால் தென்மொழியும் தென்மொழிக்குடும்பமும் பெருந்துயருற்றன. இவர் மறைவு தமிழீழ விடுதலை முயற்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவர் புகழ் நீடு வாழ்க!

தென்மொழி, சுவடி : 16, ஓலை 11 சூலை 1980
============

ஆனால் இன்றைய நிலையிலும்..

தமிழீழ விடுதலைப் போராளிகள் பலரும் சரி, 
தமிழீழ மக்களும் சரி இந்திய அரசை நட்பாகவே கருதி வருகின்றனர்..

காங்கிரஸ் ஆட்சி செய்த போது, காங்கிரஸ் கட்சி தான் தமக்குப் பகை என்பது போலான அறியாமையில், பாஜக தனக்கு முழுத் துணையாக இருக்கும் என்று கருதிச் சட்டிக்குத் தப்பி நெருப்பில் குதித்தவையே  பெரும்பாலான ஈழத் தமிழர் இயக்கங்கள்..

இன்றைக்கு தமிழீழத்திலே விசுவ இந்து பரிஷத்தும், இந்து முன்னணியும் இந்திய அரசின் வழிகாட்டலில் ஊடுருவி தமிழீழத் தமிழர்களை ஆர் எஸ் எஸ் இன்  பிடிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்..

இந்தியா தான் தங்களுக்கு வழிகாட்டி போல் அவர்கள் இயங்குகின்றனர்..

எனவே தமிழ்நாட்டின் தேசிய விடுதலை பேசுகிற இயக்கங்களை அவர்கள் புறந்தள்ளுகின்றனர்..

தமக்கு இசைவான, ஆரியப் பார்ப்பனிய அடிவருடிகளையே நட்பாக்கிக் கொள்கின்றனர்..

இந்திய அரசை நம்பித் தாங்கள் கெட்டதுமல்லாமல், தமிழ்நாட்டு அரசியலையும் தங்கள் இசைவுக்கு ஏற்ப இந்திய அரசை பகைக்காத வகையில் வகையில் வழி நடத்துகின்றனர்..

எனவே ஆரியப் பார்ப்பனிய(பிராமணிய) எதிர்ப்பைச் செய்கிற தமிழ்நாட்டு இயக்கங்களை எல்லாம் தமிழீழத்திற்கு ஆதரவாளர்கள் அல்லாதது போன்று புறக்கணிக்கின்றனர்..

தங்கள் தலையில் பாசிச பிராமணிய பாஜகவின் மண்ணை வாரித் தூவிக் கொள்வதோடு, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையிலும் தூவி விடுகின்றனர்..

ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பில் வலுப்பெற்று வந்த தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆரியப் பார்ப்பனியம் தாண்டவம் ஆடத் தொடங்கி இருக்கிறது..

எண்ணற்ற ஈழத் தமிழர்கள் தாங்களும் காவியில் மூழ்கியதோடு, தங்களின் நலனுக்காகத் தங்களுக்குத் தொடர்புடைய தமிழ்நாட்டுத் தமிழர்களையும் காவியில் மூழ்கடிக்கின்றனர்..

=====
தமிழ்நாடும்,  தமிழீழமும் அரசியலாய் விழிப்படைந்து ஆரியப் பார்ப்பனிய இந்தியப் பாசிசத்தை எதிர்த்துப் போராடுகிற  உணர்வு பெறாத வரை, 
அவை இரண்டிற்கும் விடுதலை உரிமைகள் கிடைக்கப் போவதில்லை..

இரண்டு தேசங்களும் தங்களுக்குள் போராட்ட வழியில் நட்பாக இயங்குவதோடு இரண்டு தேச விடுதலை உரிமைகளுக்காகவும் ஒன்றுக்கொன்று துணை இருந்து வெற்றி பெறுகிற வகையில் செயலாற்றிட வேண்டிய கடமையே இக் காலத்தின் அடிப்படைத் தேவையா இருக்கிறது..
=====
ஈழத் தமிழர் இயக்கங்கள் சிந்திக்கட்டும்..

அக்கா ஊர்மிளா தேவி அவர்களின் 
புகழ் ஓங்கட்டும்! 

அவர்கள் உள்ளிட்ட இலக்கக் கணக்கான 
ஈழத் தமிழர்களின் ஈகத்திற்குப் பயன் விளையட்டும்!
logoblog

Thanks for reading நன்றி பொழிலன் தமிழ்நாடு

Previous
« Prev Post

No comments:

Post a Comment